ஞாயிறு கடிதத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. அடுத்த சில வாரங்களுக்குக் குடும்ப உறவுகள் பற்றி எழுதலாம் என்பது என் எண்ணம்.
உறவுகளுக்குள், குறிப்பாகக் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது என்பது இயல்பு. என் திருமணம் ஆன புதிதில் இதுபோல் ஒரு மனைவி அமையாது என்ற நிலையில் தான் அனைத்தும் சென்று கொண்டிருந்தன. (இப்போதும் அப்படித்தான் 🙂 ஆனால், மாதங்கள் ஓட ஓட எங்களுக்குள் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. அதை எதுவும் பேசாமல் அழகாகக் கடந்து இருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை.
என் பெற்றோரிடம் முறையிட்டேன். இது போதாது என்று என் மனைவியின் பெற்றோரிடமும் முறையிட்டேன்.
அவர்களால் என்ன செய்ய முடியும்?
பிரச்சனை பெரிதாகத் தான் ஆனது. அப்பா, அம்மா, மாமனார், மாமியாரிடம் பிரச்சனைகளை எடுத்துச் செல்வதால், ஒரு பயனும் இல்லை என்பது புரிய சில/பல வருடங்கள் ஆனது. திருமணம் முடிந்தவுடன் அவர்கள் வேலை முடிந்தது.
இப்போதெல்லாம், நெருடல் வந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. என் பெற்றோரிடமோ, என் மனைவியின் பெற்றோரிடமோ எதுவும் சொல்வதில்லை.
பிரச்சனை தானாகவே தீர்ந்து விடுகிறது.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
நம் வாழ்க்கை நம் கையில்.
நன்றி.