நம் வீட்டில் உள்ள 8 வயது சிறுமியோ, சிறுவனோ…
“நான் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி தம் அடிக்கப் போகிறேன், பின் மது அருந்தப் போகிறேன்” என்றால் நாம் ஒத்துக்கொள்வோமா? கடைக்காரர் சிகரெட்டும், மதுவும் நம் பிள்ளைகளுக்கு விற்பாரா?
18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு சிகரெட், மது விற்கக் கூடாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அதை நாமும் பின்பற்றுகிறோம். ஏன்? மது அருந்துதல், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு — இது நமக்கு தெளிவாகப் புரிகிறது.
அதே எட்டு வயது சிறுமியோ, சிறுவனோ, தாங்கள் விரும்பியதை YouTube-ல் இன்று பார்க்க முடிகிறது. 8 வயதே ஆனாலும் 13 அல்லது 18 வயது என்று கூறி Instagram தளத்தில் தாங்கள் விரும்பியதை எளிதாகச் செய்ய முடிகிறது.
இன்று உணவகங்களில் கூட உணவு உண்ணும்போது பிள்ளைகளுக்கு கைப்பேசி தேவைப்படுகிறது. YouTube இல்லை என்றால் என் பிள்ளை அழுகாமல் சாப்பிட மாட்டாள் என்று பெற்றோரும் வேறு வழி இல்லாமல், பிள்ளைகள் சாப்பிட்டால் போதும் என்று விட்டுவிடுகிறோம்.
நம் பிள்ளைகள் எப்படி வளர்கின்றன என்பதை இன்று பெரும்பாலும் தீர்மானிப்பது பெரு லாபத்தோடு இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான். இதனால் பாதிப்படைவது நம் பிள்ளைகளின் மனநலம்தான்.
மது, சிகரெட் எவ்விதமான பாதிப்புகளை நம் சிறு பிள்ளைகளுக்கு உருவாக்குமோ, அதேபோன்ற பாதிப்புகளை கைப்பேசிகள் நம் பிள்ளைகளுக்கு இன்று ஏற்படுத்துகின்றன.
இதைத் தடுக்க இந்திய, உலக அளவில் இன்று சட்டங்கள் தேவை.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்